கர்நாடகாவில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் நிறைவேற்றம்..!

கர்நாடகா மாநில சட்டப் பேரவையில் பாஜக அரசு கட்டாய மத மாற்ற தடை சட்டமான மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டம் நிறைவேறியுள்ளது.

கர்நாடகாவில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவருவோம் என தேர்தல் காலத்திலேயே பாஜக வாக்குறுதி தந்தது. பாஜக ஆட்சி அமைத்ததும் அங்கு மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், மேலவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் அங்கு இந்த மசோதா நிறைவேறாமல் போனது. இருப்பினும் பாஜக இந்த சட்டத்தை இயற்றி விட வேண்டும் என விடாப்பிடியாக பேசிவந்த நிலையில், அங்கு சட்ட மேலவை உறுப்பினர்கள் பலரின் பதவிக்காலம் நிறைவடைந்து காலியான இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் அதிக இடங்களை கைப்பற்றி அங்கு பாஜக பெரும்பான்மையை பிடித்துள்ளது. இதையடுத்து தற்போது கர்நாடகா சட்டப்பேரவை மழைக் காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகா அரசு அரசியல் சாசனத்திற்கு எதிராக இந்த மசோதாவை கொண்டுவந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த அம்மாநில உள்துறை அமைச்சர் ஞானேந்திரா அனைவரும் தங்களின் மத வழக்கப்படி வாழ அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் சமீப காலமாக வலுக்கட்டாயமாக அல்லது ஆசை காட்டி பிறர் மதம் மாற்றுவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறிய நிலையில், அரசு மசோதாவை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவுள்ளது. புதிய சட்டத்தின் படி, கட்டாய மத மாற்ற குற்றம் உறுதி செய்யப்பட்டால் அந்த நபருக்கு 3-5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.