98 வீதமான இராணுவமும் பொலிஸாரும் அரகலயவுடன் : சரத் பொன்சேகா (Video)

98 சதவீத பொலிஸாரும், 98 சதவீதமான இராணுவத்தினரும், 100சதவீதமான ஓய்வுபெற்ற இராணுவமும் போராட்டத்தின் பக்கம் இருப்பதாகவும், இந்த அரசியல் விளையாட்டுகள் அனைத்தும் இன்னும் இரண்டு வருடங்களில் முடிவுக்கு வரும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஹைட் பார்க்கில் நேற்று (16) இடம்பெற்ற எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனதா விமுக்தி பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி, அரசியல் குழு உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மொட்டில் இருந்து பிரிந்து சென்ற டலஸ் தரப்பு சார்பில் சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார ஆகியோருடன் பல அரசியல்வாதிகள், தீவிர தொழிற்சங்க தலைவர்கள், வெகுஜன இயக்க தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள , வசந்த முதலிகே, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்ஷு சபையின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், ஹஷான் ஜீவந்த குணதிலக்க ஆகியோர் அரகலய போராட்டத்தை முன்னிறுத்தி போராடியதால் அவர்களை கௌரவிக்கும் விதமாக நான் இங்கு பேச அவர்களது அனுமதியை வேண்டுகிறேன்.

இன்று மக்களது முகங்களில் மகிழ்ச்சியை காண முடியவில்லை. எல்லோர் முகத்திலும் வேதனை , நம்பிக்கையின்மை தெரிகிறது. நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் எந்தவொரு அரசியல்வாதியிடமும் நாட்டை முன்னேற்ற வேண்டும் எனும் தொலைநோக்கு இருக்கவில்லை.எனவே நாம் அனைவரும் கட்சி நிறத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலூடாக ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துள்ளது என பேச்சை ஆரம்பித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ,

கட்சிக்கு வந்த அழைப்பிற்கு இணங்க இங்கு வந்தாலும், கட்சி சார்பற்ற குடிமகனாக இந்த பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன் என பீல்ட் மார்ஷல் தெரிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே சரத் பொன்சேகா மேலும் கூறியதாவது:

“நாட்டின் மீது தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் நாடாளுமன்றத்தில் இல்லை. நீங்கள் கேட்கும் மாற்றத்தை பாராளுமன்றம் செய்ய முடியாது. பாராளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு ஓரளவு சிந்தனையும் புத்திசாலித்தனமும் உள்ளவர்கள் இதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் வசந்த பண்டார போன்ற குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இங்கு வந்துள்ளனர். ”

“இந்தப் போராட்டத்தை மார்ச் மாதம் தொடங்கிய நாள் முதல் நான் ஆசிர்வதித்து வருகிறேன். எனது ஆதரவு எதிர்காலத்திலும் தொடரும். அதை எந்தவொரு நிறக் கட்சி பேதமும் இல்லாமல் செய்தேன்.

“அரகலய போராட்டம் பலவீனமானது போராட்டத்திற்கு தலைமை இல்லாததால் அல்ல. போராட்டத்திற்கு அடித்தளம் இருக்கவில்லை. , எதிர்காலத்தில் மருத்துவர்கள், படித்த வழக்கறிஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைவரும் இந்தப் போராட்டத்திற்கு அடித்தளம் அமைக்க வேண்டும். அப்படிச் செய்தால் போராட்டக் குழந்தைகள் முன்னேறலாம். ஒரு வீட்டில் பெற்றோர்களைப் போல பெரியவர்கள் இந்தப் போராட்டத்தின் பின்னால் நிற்க வேண்டும். அப்படி நடந்தால் இந்தப் போராட்டம் வெற்றி பெறும்.

“98 சதவீத போலீசார் போராட்டத்தின் பக்கம் உள்ளனர். பதவிகளை தேடி காவல்துறையில் அலையும் சிலரின் முகங்களை நாம் அறிவோம். உங்களுக்கு இன்னும் இரண்டு வருடங்கள்தான் உள்ளன. வாஸ் குணவர்தன எப்படி ஆடினார் என்று பார்த்தோம். அனுர சேனாநாயக்க எப்படி ஆடினார்? அவர்கள் எப்படி வீட்டுக்கு போனார்கள் என்பதையும் பார்த்தோம்.

“எதற்கும் பயப்பட வேண்டாம். 98 சதவீத போலீசார் எங்களுடன் இருக்கிறார்கள். 98 வீதமான படையினரும் எம்முடன் உள்ளனர். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் 100 சதவீதம் எங்களுடன் உள்ளனர். ”

“இந்த வெற்றியை அடைய, நிறம், கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைவோம். அதில் முன்னணி சோசலிசக் கட்சியும் இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பும் இருக்க வேண்டும். ஜனதா விமுக்தி பெரமுனாவும் இருக்க வேண்டும். இந்தப் புரட்சியில் நாட்டில் உள்ள அனைவரும் கட்சி நிகழ்ச்சி நிரல்களை மறந்து தேசிய நிகழ்ச்சி நிரலாக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

“இரத்தத்தைக் கண்டு பயப்பட வேண்டாம். சிறைகளைக் கண்டு பயப்பட வேண்டாம். இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் அனைத்து விளையாட்டையும் ஆடலாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ” என்றார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Leave A Reply

Your email address will not be published.