பாகிஸ்தானை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்தன. 3வது டி20 போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது.

அந்த அணி தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் 40 ரன் அடித்தார். ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 81 ரன்களும், பென் டக்கெட் 42 பந்துகளில் 70 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் பாபர் மற்றும் ரிஸ்வான் தலா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். குஷ்தில் ஷா 29 ரன்கள் எடுத்து ஆட்டழிந்தார். முகமது நவாஸ் 19 ரன்னுடன் வெளியேறினார்.

அதிகபட்சமாக பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் 65 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.