யாழ். வைத்தியசாலையில் தொடர் திருட்டு! – 23 கைபேசிகளுடன் இளைஞர் ஒருவர் கைது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தொடர் கைபேசித் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நாவற்குழியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்றும், அவரிடம் இருந்து 23 கைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் திருடப்பட்டவை என்று கூறப்படுகின்றது.

சந்தேகநபர் மருத்துவமனை விடுதியில் தங்கியுள்ளவர்கள் மற்றும் மருத்துவமனைக்குச் வருவோரிடம் இருந்து கைபேசிகளைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டவர் என்று கூறப்படுகின்றது.

பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் கைபேசிகளைப் பறிகொடுத்தவர்கள், தங்கள் கைபேசிகளை அடையாளம் காட்டிப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.