யாழ்ப்பாணத்தில் ‘ரிக்ரொக்’ படுத்தும் பாடு; 10 சிறுமிகள் உளவளச் சிகிச்சைப் பிரிவில்!

யாழ்ப்பாணத்தில் ‘ரிக்ரொக்’ செயலிக்கு அடிமையாகி, அதன்மூலம் காதல் வயப்பட்ட 10 சிறுமிகள் யாழ். போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

அதீத அலைபேசிப் பாவனை காரணமாக இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 16 சிறுவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் பெற்று வருகின்றனர் .

அவர்களில் 10 பேர் சிறுமிகள். இவர்கள் ‘ரிக்ரொக்’ செயலியைப் பயன்படுத்தி காலப்போக்கில் அதற்கு அடிமையாகி, பின் அதன்மூலம் காதல் வயப்பட்டு உளநலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதர 6 சிறுவர்கள், நாளின் கணிசமான பகுதியை அலைபேசிக்குள் தொலைத்துக் கொண்டவர்கள். அலைபேசிப் பயன்பாட்டில் இருந்து மீளமுடியாத நிலையில் அவர்கள் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர் .

அதீத அலைபேசிப் பாவனை தொடர்பில் மருத்துவர்கள் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்ற அதேநேரம் தொலைபேசிப் பாவனையும் அதன் ஆபத்துக்களும் மறுபுறம் கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களையும் சிறுவர்களையும் விழுங்கி வருகின்றது .

அலைபேசிப் பாவனையால் சிகிச்சை பெறும் 16 பேர் இந்த வருடத்தில் மட்டும் சிகிச்சை பெறுபவர்களே. அத்துடன் இந்தப் பிரச்சினைக்குத் தாமாக முன்வந்து சிகிச்சை பெறுபவர்கள் மிகமிகக் குறைவே .

எனவே, அலைபேசிப் பாவனையால் தம் உளநலத்தைத் தொலைத்த மாணவர்கள் சமூகத்தில் இன்னும் பல மடங்கு இருக்கலாம்.

பெற்றோர் தமது பிள்ளைகளின் அலைபேசிப் பாவனை தொடர்பில் உச்சபட்சக் கவனத்துடன் இருக்க வேண்டும்” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.