கோட்டாவைப் பதவி விலக்கிய எங்களுக்கு வேந்தரைத் தூக்குவது பெரிய விடயமல்ல! – பேராதனை பல்கலையில் அச்சுறுத்தல்.

“பல்கலைக்கழகங்களினுள் அடிப்படைவாதம், பாசிஷவாதம், பகிடிவதை உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகள் இடம்பெறும் நிலையில் அவற்றை அனுமதிக்க முடியாது. எனவே, பல்கலைக்கழக மாணவர்களினதும், விரிவுரையாளர்கள் மற்றும் வேந்தர்களினதும் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு.”

இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (05) விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு குறிப்பிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகையில்,

“நாட்டின் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவையே பதவி விலக்கிய எமக்கு வேந்தரைப் பதவி விலக்குவது பெரிய விடயமல்ல என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்று பேராதனை பல்கலைக்கழக வேந்தர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு அப்பாற்பட்ட பல கொடுமைகள் இடம்பெறுகின்றன. பல்கலைக்கழகத்துக்குள் அடிப்படைவாதம், பாசிஷவாதம் உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவற்றை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஜனநாயகம் தொடர்பில் பலர் தமக்குச் சாதகமாக வரைவிலக்கணம் செய்து கொள்ளலாம். வீடுகளை எரித்து, வன்முறைச் சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அவர்களுக்கு ஒரு மணித்தியாலத்தில் பிணை வழங்கப்பட்டதை கைத்தட்டி வரவேற்றமை ஜனநாயகம் அல்ல.

எனவே, பல்கலைக்கழகங்களினுள் இடம்பெறும் அடிப்படைவாதம், பாசிஷவாதம், பகிடிவதை உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகலிலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக வேந்தர்கள் ஆகியோரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு. அதற்கான நடவடிக்கையை எடுப்போம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.