பிலாஸ்பூர் எய்ம்ஸ் பசுமை மருத்துவமனையாக அறியப்படும் – பிரதமர் மோடி பெருமிதம்

ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது பசுமை மருத்துவமனையாக அறியப்படும் என மோடி தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி 2017- ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி அந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். முன்னதாக பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்ட பிரதமர் மோடி, மருத்துவமனையில் இடம்பெற்றுள்ள அதிநவீன வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்து 470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18 சிறப்புப் பிரிவுகள், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 சிறப்பு அறுவை சிகிச்சை மையங்கள், 750 படுக்கைகள், 64 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. மேலும் 24 மணி நேர அவசர சிகிச்சை, டயாலிசிஸ் வசதிகள் அல்ட்ராசோனோகிராபி, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற நவீன இயந்திரங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. அம்ரித் மருந்தகம், 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பிரிவு உள்ளிட்டவை மருத்துவமனையில் இடம் பெற்றுள்ளன.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் பழங்குடியினர் மற்றும் அணுக முடியாத பழங்குடியின பகுதிகளில் சுகாதார சேவைகளை வழங்க இணைய வழியிலான சுகாதார மையமும் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. காசா, சலுனி, கீலாங் போன்ற அணுக முடியாத பகுதிகளில் முகாம்கள் மூலம் சிறப்பு சுகாதார சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் MBBS படிப்புகளுக்கு 100 மாணவர்களும், நர்சிங் படிப்புகளுக்கு 60 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஹிமாச்சலின் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, குறைந்த விலையில் மருத்துவ சேவையை அளிப்பது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை ‘பசுமை மருத்துவமனை’யாக அறியப்படும் என்றும் அவர் கூறினார்.பின்னர், 3 ஆயிரம் 650 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.