செல்வம் கொட்டும்… மந்திரவாதி பேச்சை கேட்டு 2 பெண்களை கழுத்தறுத்து நரபலி கொடுத்த கேரள தம்பதி

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களும் லாட்டரி விற்று தொழில் செய்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இரண்டு பெண்களையும் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பெண்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, இருவரின் செல்போன்களும் கடைசி சிக்னலாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற பகுதியை காட்டியது.

அவர்களின் செல்போன் எண்ணிற்கு கடைசியாக போலி மந்திரவாதியான முகம்மது ஷபி என்பவர் பேசியிருப்பதும் தெரியவந்தது. உடனே முகமது ஷபியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களையும் நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்தார்.

திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங். இவரது மனைவி லைலா. பகவல்சிங்கிற்கு அதிகமான கடன் மற்றும் பணப்பிரச்சினைகள் உள்ளன. பணப்பிரச்சினையில் இருந்து விடுபடவும், பணக்காரனாக மாறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என போலி மந்திரவாதி முகமது ஷபியை சந்தித்து பகவல்சிங் பேசியிருக்கிறார்.

2 பெண்களை நரபலி கொடுத்தால் நிறைய செல்வம் கிடைக்கும் என்று முகமது ஷபி கூற, அதற்கு பகவல்சிங்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். நரபலிக்கான பெண்களே நானே அழைத்து வருகிறேன், அதற்கான பணத்தை மட்டும் கொடுக்குமாறு முகமது ஷபி கூற, பகவல்சிங்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

லாட்டரி விற்பனையில் தனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த ரோஸ்லின், பத்மா ஆகியோரை பகவல்சிங்கின் வீட்டில் நடந்த பூஜைக்கு வரவழைத்துள்ளார் முகமது ஷபி. பூஜையில் கலந்து கொண்டால் பணம் கொடுப்பதாக முகமது ஷபி கூறியதால், இரு பெண்களும் பூஜையில் பங்கேற்க சம்மதித்து வந்துள்ளனர். இரவில் நடந்த பூஜையில் இரு பெண்களின் கழுத்தையும் அறுத்து கொலை செய்து நரபலி கொடுத்துள்ளனர்.

பின்னர் இருவரின் உடல்களையும் மருத்துவர் பகவல்சிங்கின் வீட்டின் அருகிலேயே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர். நரபலி சம்பவம் குறித்து அறிந்த போலீசார் ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங், அவரது மனைவி லைலா, போலி மந்திரவாதி முகம்மது ஷபி ஆகியோரை கைது செய்தனர்.

பெண்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவர்களின் உடல்களை தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். கொலை செய்யப்பட்ட 2 பெண்களில் பத்மா என்ற பெண் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், லாட்டரி தொழிலுக்காக அவர் கேரளா சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டாலும் இருவரும் தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் கொலை செய்யப்பட்டுள்ளனர் இதில் பத்மா ஜுன் மாதமும், ரோஸ்லின் ஆகஸ்ட் மாதமும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.