ஒரு லிட்டர் பால் ரூ.32ல் இருந்து ரூ.42 ஆக உயர்த்த கோரி தொடர் பால் நிறுத்த போராட்டம் – பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி வரும் 28ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது.

ஆவின் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 28ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறும் போது, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் 32 ரூபாயிலிருந்து 42 ரூபாயாகவும் எருமை பால் ஒரு லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 51 ரூபாயாக கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.