இந்திதான் தான் இந்தியாவின் தாய்மொழி என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சி… மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் – வேல்முருகன்

மீண்டும் மீண்டும் இந்தியை திணிக்க முயற்சித்தால் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை நடைமுறைப்படுத்த பாசிச மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக் கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பு தேர்வுகளில் இந்தி மொழி அவசியம், பணியாளர்கள் தேர்விலும் இந்தி மொழி அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது. மத்திய அரசின் அலுவலகங்கள், இலாகாக்கள் அளிக்கும் கடிதங்கள், பதில்கள், மின்னஞ்சல்கள் ஆகிய அனைத்தும் இந்தி மொழியில் தான் இருக்க வேண்டும். அரசின் விளம்பரங்கள், நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தி மொழியில் தான் இருக்க வேண்டும், ஐ.நா.வில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மொழி தான் இருக்க வேண்டும் என்பது தான், அமித்ஷா தலைமையிலான குழுவின் பரிந்துரைகள்.

இந்தியாவில் வாழும் பல்வேறு இனக்குழுக்களின் மொழிகளை மறைத்துவிட்டு, அழித்துவிட்டு இந்திதான், நாட்டின் தாய்மொழி என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்க, ஆர்.எஸ்.எஸ் வகையாறாக்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்களின் முடிவு, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்பதை, சற்றும் கூட சிந்திக்கவில்லை. சனாதானத்தை உள்ளடக்கிய இந்து ராஷ்டிரத்தை நிறுவி, அனைத்து தாய் மொழிகளையும், பல்வேறு இனக்குழுக்களின் பண்பாடு, உணர்வுகளையும் அழிப்பது என்பது, மோடி, அமித்ஷா கும்பல்களின் திட்டம்.

இந்தித் திணிப்புக்கு எதிராக 1935 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு நடத்திய வீரம் செறிந்த போராட்டங்கள், எங்களது தமிழை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனக்குழுக்களின் மொழிகளையும் காப்பாற்றியுள்ளது.

எனவே, இந்திய ஒன்றியத்தில், மீண்டும் இந்தி திணிப்பை கையில் எடுப்பதன் வாயிலாக, அது நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும். மீண்டும் மீண்டும் இந்தி திணிக்க முயன்றால், அது மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வித்திடும்’ என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.