யாழில் கட்டடத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு! – 10 பேர் தடுத்துவைத்து விசாரணை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாகப் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த மிராஜ் என அழைக்கப்படும் 31 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அருகில் உள்ள விருந்தினர் விடுதிப் பணியாளர்கள் 10 பேரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதிதாகக் கட்டப்பட்டு வரும் குறித்த கட்டடத்தில் வேலை செய்யும் குழு ஒன்று நேற்றிரவு அருகில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குச் சென்று மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திய பின்னர் மது போதையில் விடுதியில் குழப்பத்தை ஏற்படுத்தி , விடுதிப் பணியாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி தாம் வேலை செய்யும் புதிய கட்டடத்துக்கு வந்துள்ளனர்.

இந்தநிலையில், அவர்களில் ஒருவர் கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் விடுதி பணியாளர்களைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.