ஜே.ஆரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ரணில்! – அநுர சீற்றம்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரின் மாமாவான ஜே.ஆரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தேர்தலைப் பிற்போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

“தேர்தலை இழுத்தடிக்கவே சர்வஜன வாக்கெடுப்பு குறித்து கதைக்கப்படுகின்றது. இந்தத் திட்டம் வெற்றியளிக்க ஜே.வி.பி. ஒருபோதும் இடமளிக்காது” எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்குக் கூட தெரிவு செய்யப்படாதவர். அவரது ஒட்டுமொத்தக் கட்சியும் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டது. அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள கட்சியாகும். எனவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏற்கனவே ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக நடத்த வேண்டும்.

தற்போது தேர்தல் ஆணையத்துக்கு அந்த அதிகாரம் கிடைத்துள்ளது. ஆனால், தேர்தலைப் பிற்போட அரசு முயற்சிக்கின்றது. அதனால்தான் சர்வஜன வாக்கெடுப்பு பற்றிய கதை பரப்பப்படுகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.