ஆர்ப்பாட்டத்தில் 8 மாணவர்களே கைது! – பொலிஸார் விளக்கம்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே 8 மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

போராட்டத்துக்கு அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் தேரர் ஒருவரும் அடங்குகின்றார். 8 பேரும் தற்போது வத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த மூவரையும் உடனடியாக விடுவிக்கக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்துக்கு முன் அனுமதி பெறாததால், போராட்டக்காரர்களுக்குப் பொலிஸார் நோட்டீஸ் கொடுத்ததால் அமைதியின்மை ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.