தமிழர் மீதான இன அழிப்புக்கு சர்வதேச விசாரணையே நீதியைப் பெற்றுத்தரும்!

ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புக்குச் சர்வதேச சுயாதீன விசாரணை மாத்திரமே பரிகார நீதியை நிலைநாட்டும் என்று ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவுக்கான பணிப்பாளரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார்.

ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர், இலங்கைக்கான விசேட பணிப்பாளர், ஜேர்மன் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆகியோருக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நேற்று (18) பேர்லின் தலைநகரத்தில் நடைபெற்றது.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஈழத் தமிழர்களின் அரசியல் நெருக்கடிகள் தொடர்பிலும், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடினோம்.

ஐ.நாவில் பல்வேறு விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதைச் தமிழ் மக்கள் ஒருபோதும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை; மாறாக ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புக்குச் சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும் என்று வலியுறுத்தினோம்.

மேலும், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இனக் குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை போன்ற பல பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீள வேண்டிய தேவை உள்ளது. அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை முன்வைக்க வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டினோம்.

அத்தோடு, ஐ.நா. தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் எக்காலத்திலும் அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் கலந்துகொண்ட அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒருமித்துத் தெவித்தார்கள்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஜேர்மன் ஆளும் கட்சிகளில் ஒன்றான பசுமைக் கட்சியின் கொள்கை வகுப்பாளருடனும் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, ஈழத்தமிழர்கள் சார்ந்து சில நிலைப்பாடுகளை உணரமுடிந்தது. அத்தோடு அவர்களுடன் ஒரு தொடர்ச்சியான தகவல் பரிமாற்றத்தை முன்னெடுக்கவும், அவர்களுடனான தொடர்பை பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல் ஜேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையால் ஒருங்கிணைக்கப்பட்டது.

ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி ப.அஞ்சனா மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் இதில் கலந்துகொண்டனர்” – என்றார்.

இதேவேளை, பேர்லின் நகர உணர்வாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனைச் சந்தித்து வரவேற்ற தருணத்தில் வெளிவிவகார அமைச்சுடன் நடைபெற்ற சந்திப்பு, தாயக மக்களின் நிலைமை, இன்று தமிழ் இனத்துக்கான விடுதலையை நோக்கிய அரசியலுக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான ஆபத்து, விடுதலையை நோக்கிய பயணத்தில் புலம்பெயர் மக்களின் வகிபாகம் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.