இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்!

“கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்.”

இவ்வாறு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போதே டொனால்ட் லூ இதனைக் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு அமெரிக்க அரசு தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கு நன்றியும் தெரிவித்தார்.

இலங்கையில் அமைதியான சூழலை ஏற்படுத்தியதற்காக ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்த உதவி இராஜாங்கச் செயலாளர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சவால்களை வெற்றிகொண்டு நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சகலவிதமான ஆதரவையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் டொனால்ட் லூ மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.