தமிழர்களின் தனித்துவத்தைப் பறைசாற்றிய காலம், சோழர்களின் ஆட்சிக் காலம் ! – சிறீதரன் தெரிவிப்பு (photos)

சோழர்களின் ஆட்சியில்தான் தமிழர்களுக்கான தனித்துவ அடையாளங்கள் நிறுவப்பட்டன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

ருத்ரக்ஷா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்துள்ள இராணி சீதை திரையரங்கில் நேற்று நடைபெற்ற இராஜராஜசோழன் விருது வழங்கும் விழாவில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சோழர்களின் ஆட்சிக்காலம் என்பது தமிழக வரலாற்றின் பொற்காலம் என்றே போற்றப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இராஜராஜ சோழன் காலத்தே தமிழும், சைவமும் செழிப்புற்றிருந்ததை வரலாறு சொல்கின்றது.

தமிழர்களுக்கான மாபெரும் அடையாளமான தஞ்சைப் பெருங்கோயில் உள்ளிட்ட பல அடையாளங்களை நிறுவிய சிறப்புமிக்க சோழர்களின் ஆட்சி முறையும், வீரமும், விவேகமும் தமிழர்கள் மார்தட்டிப் பெருமிதம் கொள்ளத்தக்க வரலாறுடையவர்கள் என்பதை எண்பிக்கும் சாட்சியங்கள்” – என்றார்.

தமிழ்நாடு, கர்நாடகா, இலங்கை, மலேசியா என்று நாடு கடந்த ரீதியில் மொழிக்கும், கலைக்கும், இனத்துக்குமாக தத்தம் துறைசார்ந்து அளப்பெரும் பணியாற்றிய பல ஆளுமைகள் இந்த நிகழ்வில் இராஜராஜசோழன் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.