Bigg Boss நிகழ்ச்சியில் ஒரு அரசியல்வாதி – யார் இந்த விக்ரமன்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். நடப்பு சீசனில், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான விக்ரமன் பங்கேற்றுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழில், நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

பல்வேறு துறைகளில் மக்கள் மனம் கவர்ந்தவர்களை இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக அழைப்பார்கள். தமிழில் 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 20 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தபட்டனர்.

அவர்களில் ஒருவர் தான் பத்திரிக்கையாளரும் அரசியல்வாதியுமான விக்ரமன்.

யார் இந்த விக்ரமன்?
விக்ரமனின் முழுப் பெயர் விக்ரமன் ராதாகிருஷ்ணன். இவர் திருநெல்வேலியில் பிறந்து, தேனியில் வளர்ந்தார்.

தமிழ் வழி கல்வியை விரும்பி பயின்றவர். இவர் பெங்களூருவில் இருக்கும் School of Policy and Governanceஇல் பட்டம் பெற்றார். பள்ளிப் பருவத்திலிருந்தே அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டவர்.

விக்ரமன் 2016ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதே வருடம் சன் டிவியில் ஒளிபரப்பான EMI – தவணை முறை வாழ்க்கை என்ற சீரியலில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிருபராகவும் (Correspondent) கலாட்டா மீடியாவில் பொலிடிகல் எடிட்டர் ஆகவும் விக்ரமன் பணியாற்றியிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த விக்ரமன் கடந்த 2020 ஆம் ஆண்டு கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். திருமாவளவனின் கொள்கைகளால் ஈர்கப்பட்ட விக்ரமன், அவரை தீவிரமாக பின்தொடர்ந்து வருபவர்.

விக்ரமன், அரசியல் சார்ந்த விவாதங்களில் பெரும்பாலும் பங்குகொள்பவர். சமூக ரீதியிலான பிரச்னைகளுக்கு டிவிட்டரில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும், பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகவும் இவர் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்தன.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், அதன் கதாபாத்திரங்கள் இந்துத்துவ கொள்கைகளை பரப்புகிறது என்ற சர்ச்சைக்கும் டிவிட்டரில் தனது கருத்தை வெளியிட்டிருந்தார் விக்ரமன்.

பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் அரசியல் பின்புலத்திலிருந்து ஒருவர் பங்கேற்பது இதுவே முதல் முறை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.