வங்காளதேசத்திடம் வீழ்ந்தது நெதர்லாந்து.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆபிப் உசைன் 38 ரன்கள் சேர்த்தார். நஜ்முல் உசைன் 25 ரன், மொசாடெக் உசைன் (20 நாட் அவுட்) ரன் சேர்த்தனர்.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி, வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. மறுமுனையில் அதிரடியாக ஆடிய கொலின் ஆக்கர்மேன், 48 பந்துகளில் 62 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது.

கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய பால் வேன் மீகரன், எதிரணியை சற்று மிரளச் செய்தார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் 14 ரன்களே எடுத்தது. மீகரன் 14 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 24 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி பந்தில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

வங்காளதேச அணியின் தஷ்கின் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.