கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடினாரா கிரீஷ்மா?

கேரள மாநிலத்தை உலுக்கியிருக்கும் ஷரோன் ராஜ் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மா, கொலை செய்வது எப்படி என்று கூகுளில் தேடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷரோன் ராஜை தான் கொலை செய்யவில்லை என்று கிரீஷ்மா விசாரணையின்போது கூறியதாகவும், விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது செல்லிடப்பேசியில் கொலை செய்வது எப்படி என்று கூகுளில் தேடியதை ஆதாரமாகக் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது மட்டுமல்லாமல், கொலை செய்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பதையும் முன்கூட்டியே கிரீஷ்மா கூகுளில் தேடியதாகவும் கூறப்படுகிறது.

வேறொருவருடன் திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், காதலனை வீட்டுக்கு வரவழைத்து ஆயுர்வேத மருந்து என்று கூறி கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த வழக்கில், கிரீஷ்மா மற்றும் அவரது தாய் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷரோன் ராஜை விஷம் வைத்துக் கொலை செய்ய உதவியதாகவும், தடயங்களை அழித்ததாகவும், கிரீஷ்மாவின் தாய் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் ஷரோன் ராஜூக்கு கலந்து கொடுக்கப்பட்ட விஷ பாட்டிலை, வீட்டின் அருகே இருக்கும் வனப்பகுதிக்குக் கொண்டு சென்று வீசியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர், தனது காதலி கசாயம் என்று கூறி கொடுத்த திரவத்தைக் குடித்த நிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்து பலியானார்.

தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஷரோன் ராஜ் என்ற இளைஞர், அக்டோபர் 14ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனது காதலி வீட்டுக்கு நண்பருடன் வந்துள்ளார். வீட்டுக்குச் சென்ற ஷரோனுக்கு அவரது காதலி, கசாயம் என்று கூறி ஒரு மருந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஷரோன், தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து 11 நாள்களில் மரணமடைந்தார்.

மருத்துவ பரிசோதனையில், அவர் ஆசிட் போன்ற திரவத்தைக் குடித்ததால், அவரது உடல் உறுப்புகள் சேதமடைந்து பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்நிலையத்துக்கும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குன்னத்துக்கல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தான் காதலித்த ஷரோனிடமிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, ஆயுர்வேத மருந்து என்று சொல்லி பூச்சி மருந்தைக் கலந்து குடிக்கக் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

கடந்த ஓராண்டுக்கும் மேல் இருவரும் காதலித்து வந்ததாகவும், ஆனால், ராணுவத்தில் பணியாற்றும் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதால், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், தான் ஷரோனையே திருமணம் செய்வதாக கிரீஷ்மா சமாதானம் செய்துள்ளார்.

தனது ஜாதகப்படி, தான் முதலில் திருமணம் செய்து கொள்ளும் நபர் இறந்துவிடுவார் என்றும், அதனால் முதலில் ராணுவ வீரரைத் திருமணம் செய்து கொண்டு அவர் இறந்ததும் ஷரோனை திருமணம் செய்துகொள்வதாக கிரீஷ்மா கூறியுள்ளார். ஆனால், இதற்கு ஷரோன் ஒப்புக் கொள்ளவில்லை. இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ராணுவ வீரரிடம் காட்டி திருமணத்தை நிறுத்துவேன் என்றும் ஷரோன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் ஷரோன் தீவிரமாக இருந்ததால், அவரைக் கொலை செய்வது என்று கிரீஷ்மா முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வீட்டுக்கு வரவழைத்து, ஆயுர்வேத மருந்து என்று கூறி பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானத்துடன் கலந்து கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக் கொண்டுள்ளார்.

இதில் விநோதம் என்னவென்றால், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயிரிழக்கும் நிலையிலும் கிரீஷ்மா கலந்துகொடுத்த ஆயுர்வேத மருந்தைக் குடித்த பிறகுதான் தனக்கு இப்படி ஆனது என்று பெற்றோரிடமோ, மருத்துவர்களிடமோ, காவல்துறையிடமோ ஷரோன் கூறவில்லை என அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.

தனது இறுதிக்கட்ட வாக்குமூலத்தில் கூட, காவல்துறையிடம், கிரீஷ்மா தனக்கு விஷம் கலந்து கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே ஷரோன் கூறியுள்ளார் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.

உடல் உறுப்புகள் ரசாயன ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் அறிக்கை கிடைத்ததும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.

இதற்கிடையே, காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கிரீஷ்மா, சுத்திகரிப்பானைக் குடித்து தற்கொலைக்கு முயன்று திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.