மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகளை அரசு அபகரிக்கத் துணைபோகின்றார் பிள்ளையான் – சாணக்கியன் பகிரங்கக் குற்றச்சாட்டு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசின் செயற்பாடுகளுக்குப் பிள்ளையான் துணைபோகின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்.

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை நடாத்தாமல், நேற்று வாகரை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாத்திரமே நடத்தப்பட்டுள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து இன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடத்தப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தான் ஒரு சதி நடவடிக்கையாகவே பார்க்கின்றார் என்றும், குறிப்பாக வாகரையை முற்றாக அரசுக்குத் தாரைவார்ப்பதற்குரிய நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் சாணக்கியன் எம்.பி. குற்றம் சுமத்தினார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கமாக முன்வைத்தார்.

குறிப்பாக வாகரையில் இறால் வளர்ப்புத் திட்டம் மற்றும் காணிகளை வழங்கும் திட்டங்களில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

அதேபோன்று சேதனப்பசளை என்ற பெயரில் ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றன என்றும், இதற்கும் பிள்ளையான் துணைபோகின்றார் என்றும் சாணக்கியன் எம்.பி. சாடினார்.

அத்துடன், அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கான அறிவிப்புகள் தங்களுக்கு முறையாக விடுக்கப்படுவதில்லை என்றும் இதன்போது அவர் விசனம் வெளியிட்டார்.

தான் இந்தக் கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது என்ற எண்ணத்திலேயே தனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

எனினும், எந்தச் சந்தர்ப்பத்தில் மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தான் குரல் கொடுக்கப் பின்னிற்கப்போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.