நாட்டை அழித்தவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் எனக் கூக்குரல்! – சாணக்கியன்.

“நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாது. நாட்டை அழித்தவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் எனக் கூக்குரல் இடுகின்றனர்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளைப் பார்க்கின்ற போது பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மூலகாரணமாகக் கடந்த பல வருட காலமாக இடம்பெற்றுள்ள பிரச்சினைகளைக் கூறலாம். இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு 1948 இலிருந்து ஆட்சி புரிந்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்திய வம்சாவழியினர் ஆற்றிய பாரிய பணிகளாக துறைமுகம் அமைத்தல், தேயிலைக் கைத்தொழில் வளர்ச்சிக்கு உதவியமை போன்றவற்றைக் குறிப்பிட்டார். டி.எஸ்.சேனநாயக்க இந்திய வம்சாவழியினரின் குடியுரிமையைப் பறித்தார்.

இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய பங்களிப்பை வழங்குவது ஆடைக் கைத்தொழிலாக இருக்கின்ற போதிலும் தேயிலையின் ஊடாகவே அதிக ஏற்றுமதியை நாம் பெறுகின்றோம்.

இவ்வாறு 1948 இலிருந்து நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவிய தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாம் என்ன உதவிகளை செய்துள்ளோம்?

இந்தியத் தமிழர்களை வெளியேற்றுவதற்கு அரசு எடுத்த முயற்சியே தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும்.

மட்டக்களப்பின் ஒரு பகுதியாகவே அம்பாறை காணப்பட்டது. ஆனால், தற்போது அது ஒரு மாவட்டமாக உருவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் காணியில்லாத அநேகர் இருந்தனர். எந்த இனத்தவருக்கும் காணி வழங்கப்படாத போது வேறு இடங்களிலிருந்து மக்களைக் கொண்டு வந்து அம்பாறை மாவட்டத்தில் குடியமர்த்தினர்.

நான் 500 இளைஞர்களை மாத்தறைக்கு அழைத்துச் சென்று காணி வழங்க முனைந்தால் மாத்தறை இளைஞர்கள் விரும்புவார்களா? இதற்கு உடன்படுவார்களா?

இன்று பொருளாதாரப் பிரச்சினையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். நாட்டை அழித்தது அரசியல்வாதிகள்தான் என்று ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள மக்களுக்கு உண்மையைக் கூறுங்கள்.

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காது தடையாக இருப்பது யார்? என நீங்களே கூறுங்கள்.

இங்கு வரிச்சலுகை பற்றி பேசப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகின்ற காலம் தடையை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறினர். சுற்றுலாப் பயணிகளால் மாத்திரம் தற்போதைய நெருக்கடி நிலையைச் சீர்செய்ய முடியாது.

1948ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை நீடித்து வருகின்ற தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்க்காது விட்டால் இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆண்டனர். சுதந்திரத்தின் பின்னர் பண்டாராநாயக்கா சிங்களத் தனிச்சட்டத்தைக் கொண்டு வந்தார். சிவில் நிர்வாக முறைமை கொண்டுவரப்பட்டமையால் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலும், மொனராகலை மாவட்டத்திலும் ஒரே புள்ளிகளைப் பெறுகின்ற மாணவர்களில் மொனராகலை மாவட்ட மாணவர் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல தகுதியுடையவராகின்றார். ஆனால், யாழ். மாவட்ட மாணவரின் அனுமதி நிராகரிக்கப்படுகின்றது. இங்கு அநீதியே இழைக்கப்படுகின்றது.

அம்பாறை, கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்பதற்காக யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் தெரிவான மாணவரின் வாய்ப்பைப் பறிப்பது நியாயமானதா?

இலங்கையை அழித்தவர்கள்தான் தற்போது பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும் என்று கூக்குரலிடுகின்றனர். நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது விட்டால் இந்த நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

முன்னைய அரசு சர்வதேசத்துக்குப் பல வாக்குறுதிகளை அளித்தது. அதிலொன்று “போரை முடித்துக்கொள்ளுங்கள்; தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குகின்றோம்” என்பதாகும்.

2012 வரை இந்த வாக்குறுதி தொடர்பில் ஆர்வம் காட்டப்படவில்லை. ஆகவேதான் இந்தப் பிரச்சினை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்துக்குச் சென்றது.

சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் படி பரிந்துரை செய்யுமாறு கேட்கின்றேன். அவ்வாறு செய்வீர்களா?

இந்த இடத்தில் எனது புதல்வரை, கணவரைக் கையளித்தேன் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கூறுகின்றனர். தனது புதல்வர், கணவனுக்கு நடந்தவற்றைக் கேட்பதற்கு அந்தத் தாய்க்கும், மனைவிக்கும் உரிமை இருக்கின்றது.

தேர்தல் காலம் தாழ்த்தப்படக் கூடாது. இந்த நாட்டில் அதிகாரப் பரவலாக்கத்துக்கு ஒரு முறையைக் கொண்டு வாருங்கள். நாட்டை இரண்டாகப் பிரிக்கக் கூறவில்லை. ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்டு வரும்படியே கூறுகின்றோம்.

கமத்தொழில் அமைச்சின் ஊடக சேதனப் பசளையைப் பயன்படுத்த ஒரு ஹெக்டயருக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. 17 கம்பனிகள் சேதனப் பசளைக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மட்டக்களப்பில் மாத்திரம் 73 ஆயிரம் ஹெக்டயர் பரப்பளவு காணிகள் உள்ளன. 20 ஆயிரம் ரூபா வழங்குவதென்றால் 160 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. சேதனப் பசளையில் ஈர சாணம் மாத்திரமே உள்ளது. இந்தக் கம்பனிகளுக்கு வழங்கும் பணத்தைப் பிரதேச சபையின் ஊடக விவசாயிகளுக்கு வழங்குங்கள்.

மாவட்ட அபிவிருத்தித் தலைவர்களிடம் சேதனப் பசளையைக் காண்பிக்குமாறு கூறினால் அவர்கள் அவற்றை நிராகரிக்கின்றனர். மாவட்ட அபிவிருத்தித் தலைவர்களுக்கும் இந்தக் கம்பனிகளுக்கும் ஏதோவொரு பிணைப்பு உள்ளது. அவர்களுக்கும் இந்தப் பணத்திலிருந்து செல்கின்றது போலும்.

பண வீக்கம் அதிகரித்துள்ளது. இலங்கைக்கு 15 முதலீட்டாளர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களைக் கொண்டு எமது நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.