இலங்கை பெரும் சிக்கலில்! – சபையில் சஜித் சுட்டிக்காட்டு.

இலங்கையில் இன்று பெரும் சிக்கலில் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் நீண்டகால உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மிகவும் அபாயகரமான நிலையிலுள்ளதாக வகைப்படுத்தியுள்ளது.

இந்த அவதானம் குறித்து 2020 ஆம் ஆண்டு முதலே எதிர்க்கட்சியாகச் சுட்டிக்காட்டிய போதிலும் அப்போதைய ஆட்சியாளர்கள் அதனை கேலி செய்து நாட்டை தவறாக வழிநடத்தினார்கள்.

இவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது?

யார் என்ன சொன்னாலும் சர்வதேச, உள்நாட்டுக் கவனம் இந்த விடயத்தில் செலுத்தப்படவில்லை.

அமெரிக்கா தலைமையிலான பல மேற்கத்திய நாடுகள் எமது நாட்டில் அரசியல் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் வரை எந்தவித உதவிகளையும் செய்வதில்லை என்று கூறியுள்ளன.

8 மாதங்களில் 477 மருத்துவர்களும் 300 பொறியியலாளர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகின்றது. சுகாதாரத்துறையில் மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் நிலவி வருகின்றன.

இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தேர்தல் மூலம் புதிய மக்கள் ஆணையைப் பெறுவதுதான்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.