சகோதரத்துவம் என்ற பெயரில் தமிழரின் உணர்வுகளை புண்படுத்தும் அநுர அரசு – கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் விசனம்.
கறுப்பு ஜூலை வாரத்தில் சகோதரத்துவம் எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் அரசு முன்னெடுக்கும் நிகழ்வு தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என்று கொழும்பில் இன்று நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவுவேந்தல் தின நிகழ்வில் விசனம் வெளியிடப்பட்டது
42 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிரான கலவரம் ஆரம்பமான கனத்தை சுற்றுவட்டத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வடக்கு தெற்கு சகோதரத்து அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் சிவில் சமூகத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், சகோதரத்துவம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் கறுப்பு ஜூலை வாரத்தில் அரசு முன்னெடுக்கும் நிகழ்வு குறித்து விசனம் வெளியிட்டனர்.
தமிழ் மக்கள் நீதி வேண்டி நிற்கின்ற இந்தத் தருணத்தில் அவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதில் அரசு சகோதரத்துவம் என்ற பெயரில் ஆடல்பாடல்களில் ஈடுபடுகின்றது என்று கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
“கறுப்பு ஜூலை என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகவும் உணர்வுபூர்வமான விடயம். ஆனால், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அரசு நிகழ்வுகளை நடத்துகின்றது.” – என்று அவர்கள் விசனம் வெளியிட்டனர்.
“தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விடயத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசுக்கும் அநுர அரசுக்கும் இடையில் வேறுபாடு இல்லை.” – என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
