செம்மணியில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள் – இன்றும் புதிதாக 4 அடையாளம்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக நான்கு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 29ஆம் நாள் அகழ்வுப் பணி இன்று இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது நான்கு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளில் இன்று 3 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 130 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளில் இருந்து 120 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியல் துறை மாணவர்கள் ஆகியோர் இன்றைய அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.