ஒக்டோபரில் சீனா பறக்கிறார் பிரதமர்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் ஒக்டோபரில் சீனா செல்லவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசு மற்றும் இலங்கை மக்கள் சார்பில் சீனாவுக்கு அவர் வாழ்த்துக்களைக் கூறினார்.

“1949ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசை ஏற்றுக்கொண்ட பிரதான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அன்றிலிருந்து தொடரும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒக்டோபரில் பீஜிங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார். அதேபோன்று சீனாவின் ‘ஒரு சீன’ கொள்கையையும் எமது வெளிநாட்டு;க் கொள்கைளின் ஊடாக ஸ்திரமாக ஏற்றுக்கொள்கின்றோம்.” – என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.