நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாதாம் – பொன்சேகாவுக்கு மஹிந்தவின் பேச்சாளர் இப்படி பதிலடி.

“மஹிந்த ராஜபக்ஷதான் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்குக் கொண்டு வந்தார். பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவரை உலகில் எந்த நாட்டுக்குக் கொண்டு சென்றாவது பாதுகாக்குமாறு கூறிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ. இப்படிபட்ட மஹிந்தவையே பொன்சேகா இன்று கடுமையாக விமர்சித்து வருகின்றார். நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

அத்துடன், இறுதிப்போரின்போது மஹிந்த ராஜபக்ஷவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என்பது உட்பட பொன்சேகாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் முற்றாக நிராகரித்தார்.

அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள பொன்சேகா, இன்னமும் போர் மனோநிலையிலேயே காணப்படுகின்றார் எனவும் மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

“வெள்ளைக்கொடி கதையைக் கூறி படையினரைக் காட்டிக் கொடுத்த நபர்தான் பொன்சேகா. இது நாட்டு மக்களுக்கும் தெரியும்.” – என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.