மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை.

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறும்.

இந்திய நிதி உதவியுடன் செயற் படுத்தப்படும் 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டத்தின் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு இங்கு வீட்டு உரிமைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்படும் இந்த வீட்டுத் திட்டம், மலையக சமூகத்தினருக்கு ஒரு வீட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தாய்நாட்டுக்கு ஆற்றலை வழங்கும் “மதிப்புக்குரிய பிரஜைகளாக” அவர்களை மாற்றுவதற்கான அடித்தளமாகவும் இருக்கும்.

அதன்படி, மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை வழங்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்த வீடுகளை வழங்குவதற்கான முறையான வழிமுறையின் மூலம் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு விசேட அம்சமாகும்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரச பிரதிநிதிகள் குழு ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.