ஜனாதிபதியின் அறிவிப்பை வரவேற்கின்றோம்; ஆனால் சம்பள சூத்திரம் என்ன? – மனோ எம்.பி. கேள்வி.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று விடுத்துள்ள அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., ஆனால் சம்பள சூத்திரம் என்ன என்றும் வினவியுள்ளார்.
இது குறித்து அவரின் எக்ஸ் தள பதிவில் உள்ளதாவது:-
“இன்று, அடிப்படை நாள் சம்பளம் ரூ. 1,350 ஆகும். கேள்வி இதுதான்: அரசு அடிப்படை நாள் சம்பளத்தை உயர்த்தவுள்ளதா அல்லது பிற மேலதிக கொடுப்பனவுகள் மூலம் ரூ. 1,750 வருகின்றதா?
ஜனாதிபதி முதலில் மூன்று அரச பெருந்தோட்ட நிறுவனத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டு, பின்னர் தனியார் கம்பனிகளுடன் பேச வேண்டும்.
அடிப்படைச் சம்பளம் மட்டுமே EPF பங்களிப்புக்கு உட்பட்டது. கொடுப்பனவுகள் அல்ல.
கம்பனிகளின் நிலையான நிலைப்பாடு எப்போதும் உறுதியானது. தொழிலாளர் அதிக கொழுந்து பறித்தால் கூடுதல் சம்பளம் வழங்கத் தயார். இதுதான் அவர்களின் சூத்திரம்.
“அதிக கொழுந்து, அதிக சம்பளம்”. ஜனாதிபதியின் சூத்திரமும் இதுவென்றால், இதில் புதியதொன்றும் இல்லை.
தொழிலாளர்கள் அதிக கொழுந்து பறிக்க முடியாமைக்குக் காரணம் என்ன? ஏனெனில் தோட்டங்கள் பல தசாப்தங்களாகப் பராமரிக்கப்படவில்லை. ஆகவே, கொழுந்து குறைந்துள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடனான எமது உடன்படிக்கையின்படி, தொழிலாளர்கள் பங்குதாரர்களாக மாற வேண்டும். சிறு தோட்ட கூட்டுறவுகள் மூலம் இது சாத்தியமாகும்.
இதில் அரசு, தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கிடையில் கூட்டு ஒப்பந்தம் உருவாக வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு.” – என்றுள்ளது.
