“லொக்கு பெட்டி”யின் பணத்தைக் கையாண்ட தேவாலய பூசாரிக்கு 24 வரை விளக்கமறியல்!
“கிளப் வசந்த” படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “லொக்கு பெட்டி” என்பவருக்குச் சொந்தமான பணத்தைக் கையாண்டு வந்த தேவாலய பூசாரியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
“கிளப் வசந்த” என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் “லொக்கு பெட்டி” என்பவர் பெலாரஸில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரான தேவாலய பூசாரி இம்மாதம் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
தேவாலய பூசாரியின் வங்கிக் கணக்கில் 33 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என்றும், அந்தப் பணம் “லொக்கு பெட்டி”க்கு சொந்தமானது என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தேவாலய பூசாரி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 7 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
