ரணிலும் சஜித்தும் ஓரணியில் திரண்டால் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவேன் – மரிக்கார் எம்.பி. அதிரடி அறிவிப்பு.

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட முன்வந்தால் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தீர்மானம் எடுக்கவில்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒரே மேடைக்கு வந்து, ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட்டால், தேர்தலில் களமிறங்குமாறு கட்சி கோரிக்கை விடுத்தால் , எனக்கு வாக்களித்த மக்கள் கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டியிட நான் தயார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டு, முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயார். கட்சி கோரிக்கை விடுக்காவிட்டால் போட்டியிட மாட்டேன். அதேபோல் இரு தரப்பும் இணையாவிட்டாலும் களமிறங்கமாட்டேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.