ராஜபக்க்ஷவுக்கும் அநுரவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை நாள்தோறும் ஊழல், மோசடிகள் அதிகரிப்பு என்று சஜித் அணி பகிரங்கக் குற்றச்சாட்டு.
“தூய்மையான அரசியல் ஒன்றை ஏற்படுத்துவதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசில் இருப்பவர்கள், தற்போது நாளுக்கு நாள் ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டு வருகிறார்கள். ராஜபக்ஷ குழுவுக்கும் அநுரகுமாரவின் குழுவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிராேசன் பாதுக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
“நாட்டை ஆட்சி செய்து வந்த அனைவரும் ஊழல் மோசடிக்காரர்கள் எனவும், தூய்மையான அரசியல் ஒன்றைக் கட்டியெழுப்ப அதிகாரத்தை வழங்குமாறும் தெரிவித்தே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது.
இந்த அரசு ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் மக்கள் உணரும் வகையில் எதனையும் செய்யவில்லை. அதேநேரம் அரசில் இருப்பவர்கள் நாளுக்கு நாள், ஊழல் மோசடி சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டு வருகின்றார்கள்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கறுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் வங்கிக் கடன் அட்டையைப் பயன்படுத்தி இந்தியாவில் வைத்து ஒரு மில்லியனுக்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. அவ்வாறு இல்லைை என்றால் முடியுமானால் அவர் நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும். ஊழல், மோசடி தொடர்பில் இவர்களுக்கும் ராஜபக்ஷ குழுக்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றதா எனக் கேட்கின்றோம்.
சுங்கத்தில் இருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது முதல் தற்போது தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி வரை பாரியளவில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அரசு அனைத்து விடயங்களையும் அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி, தப்பித்துக்கொள்ளும் நடவடிக்கையையே கையாண்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது டித்வா அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு 20 இலட்சம் ரூபா வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பிரகாரம் அனுராதபுரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 இலட்சம் ரூபா அடங்கிய காசோலையை ஜனாதிபதி கையளித்திருந்தார். ஆனால் அந்தக் காசாேலைகளைப் பெற்றவர்கள் வங்கியில் கொடுத்தபோது, அந்த வங்கிக் கணக்குகளில் பணம் இல்லை எனத் தெரிவித்து அந்தக் காசோலைகள் மீளப் பெறப்பட்டிருக்கின்றன. இவ்வாறு 17 காசோலைகள் மீளத் திருப்பப்பட்டிருக்கின்றன.
ஆனால் அனுராதபுரம் பிரதேச செயலாளர் இதனை நியாயப்படுத்தும் வகையில், காசோலை வழங்கப்பட்டவர்களின் காணியின் உண்மையான உரிமையாளர்கள் அவர்களா? மற்றும் இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லை. அதனால் காசோலைகளை வங்கியில் இடவேண்டாம் என நாங்கள் தெரிவித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலாளரின் கூற்றின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி இருப்பது அவர்களின் காணிகளின் உரித்து தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத, ஒப்பந்தம் செய்துகொள்ளாத காசோலையாகும். அப்படியானால் ஜனாதிபதி அதிகாரபூர்வமற்ற காசோலைகளையே வழங்கி இருக்கிறார். அனுபவம் இல்லாமையே இதற்குக் காரணமாகும்.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முடியுாது என நாங்கள் ஜனாதிபதித் தேர்தலின்போதே தெரிவித்திருந்தோம். தற்போது அது உண்மையாகி வருகின்றது.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக் கூரை தகரம் ஒன்றுக்கு 10 இலட்சம் வழங்குவதாக அறிவிப்பு செய்தபோது, அவரால் ஒருபோதும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டாேம். அதேபோல் ஜனாதிபதியின் அமைச்சர்கள் தற்போது ஊழல், மோசடியில் சம்பந்தப்பட்டு வருவதால், நாடு அராஜக நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றது.” – என்றார்.
