அநுரவின் ஆட்சியை வீழ்த்தவே முடியாது!

அநுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. மக்கள் எம் பக்கமே.” – என்று அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் அரசமைப்பு பேரவையின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் ஏற்பாட்டில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கூட்டம் அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி. தலைமையில் இடம்பெற்றது.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“டித்வா பேரிடரில் பாதிக்கப்பட்ட எமது இலங்கைக்கு 49 நாடுகள் உதவி வருகின்றன. அதற்குக் காரணம் ஜனாதிபதி அநுரகுமார மற்றும் ஆட்சி மீதான பூரண நம்பிக்கை.

அம்பாறை மாவட்ட கரையோரத்தில் 125 கிலோமீற்றர் தூரம் கடலரிப்பு இடம்பெறுகின்றது. அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இவ்வாரத்தில் நடைபெறவிருக்கின்றது.

கடந்தாண்டு காரைதீவு பிரதேசத்துக்குச் சுமார் 10 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

காரைதீவு மைதானம் மற்றும் அரங்கு திருத்தம் செய்யப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” – என்றார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாடாளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர், காரைதீவு பிரதேசசபை பதில் தவிசாளர் ஏஎல்எம்.இஸ்மாயில், உதவி பிரதேச செயலாளர் எஸ்.பிரணவரூபன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி.இராஜகுலேந்திரன் மற்றும் கணக்காளர் திருமதி ஹஸ்மியா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இங்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திகள், கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆராயப்பட்டதுடன் காரைதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர் பிரச்சினை, வீதி புனரமைப்பு, மைதானம் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் விரைவில் இதற்கான தீர்வுகள் மக்களுக்கு சென்றடைய உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டது.

அத்துடன் 2026 ஆம் ஆண்டுக்கான திட்ட வரைவுகளும் முன்மொழியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.