மக்களின் காணிகள் மக்களுக்கே! வடக்கு – கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை விடுவிக்க அரசு துரித நடவடிக்கை என்று ஜனாதிபதி அறிவிப்பு.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார்.

இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

காணி விடுவிப்பும்
வீதித் திறப்பும்

2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் 1,000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எஞ்சிய காணிகளையும் முறைப்படியாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போது எழுந்துள்ள சிக்கல்களுக்குச் சாதகமான தீர்வுகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.

வழிபாட்டுத் தலங்கள்
மற்றும் விவசாயம்

மத வழிபாட்டுத் தலங்களுக்குரிய காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். மேலும், ‘டித்வா’ சூறாவளியால் சேதமடைந்த வீதிகள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் புனரமைத்தல் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

பொருளாதார முகாமைத்துவம்

மக்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்தும் அதேவேளை, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக தற்போதுள்ள காணிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கண்டறியுமாறு அவர் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.

படைத்தரப்பு நலன்புரி

பாதுகாப்புப் படையினரின் நலன்புரித் திட்டங்கள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அத்துடன், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய விதிமுறைகளுக்கு ஆலோசனைக் குழுவின் அங்கீகாரமும் பெறப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, முப்படைத் தளபதிகள் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.