மணிப்பூரில் அதிரடித் தாக்குதல்: முன்னாள் ராணுவ வீரர் உட்பட இருவர் சுட்டுக்கொலை!

மணிப்பூர்,

இம்பால்-உக்ருல் சாலையில் இன்று தீவிரவாதிகள் வாகனங்கள் மீது பதுங்கியிருந்து தாக்கியதில், ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரர் உட்பட டாங்குல் நாகா இனத்தைச் சேர்ந்த இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரின் தலையில் குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதே நேரத்தில் துப்பாக்கிக் காயங்களுடன் சிகிச்சை பலனின்றி மற்றொருவரும் பலியாகினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய தஷார் கிராமத்தைச் சேர்ந்த எஸ். டபிள்யூ. சினோஷாங் ஷோக்வுங்னாவ் (45) மற்றும் கரசோம் கிராமத்தைச் சேர்ந்த யருயிங்கம் வாஷும் (42) என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் உக்ருல் பகுதியைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் கொல்லப்பட்டதில் தங்கள் சமூகத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று குகி ஸோ கவுன்சில் மறுத்துள்ளது. அதேசமயம், டாங்க்குல் நாகா லாங் செயற்குழு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த 2023-இல் ஏற்பட்ட கலவரத்தால் பெருமளவில் உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்ப்பட்டன. கடந்த ஆண்டுமுதல் மோதல்கள் குறைந்தபோதிலும், இரு குழுக்களின் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கமாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.