காலியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பரிதாபமாகப் பலி! – மரம் விழுந்து மின்கம்பி அறுந்ததால் நேர்ந்த விபரீதம்.
காலி – உரகஸ்மான்ஹண்டி பகுதியில் வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கியதில் 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
:
உரகஸ்மான்ஹண்டி, மீகாஸ்பிட்டியா பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மூதாட்டி ஒருவர், நேற்று தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள மற்றுமொரு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். இதன்போது அப்பகுதியில் நிலவிய பலத்த காற்றினால் மரம் ஒன்று முறிந்து வீதியில் விழுந்துள்ளது.
மரம் விழுந்த வேகத்தில் அங்கிருந்த மின்கம்பியும் அறுந்து வீதியில் விழுந்துள்ளது. இதனை அவதானிக்காத மூதாட்டி, அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கியுள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்ததில் அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் உரகஸ்மான்ஹண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த மூதாட்டியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
