மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு தயார் வழக்குகளில் இருந்து தப்புவதற்காகவே ரணில் – சஜித் – நாமல் அணிகள் இணைவு – ஜே.வி.பியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா குற்றச்சாட்டு.

நீதிமன்ற வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே ரணில், சஜித், நாமல் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கலாம் எனவும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு முழுமையாகத் தயாராக உள்ளது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புதிதாக ஒன்றிணையவில்லை. கடந்த காலங்களிலும் அவர்கள் ஒன்றிணைந்தே செயற்பட்டார்கள். எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்த போதிலும் மக்கள் அரசுடன்தான் இருக்கின்றார்கள். அண்மைய காலத்தில் வெளிவந்த தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதனைத்தான் உறுதிப்படுத்துகின்றன. தோல்வியடைந்த அரசியல்வாதிகளின் கூட்டமாகவே எதிர்க்கட்சி காணப்படுகின்றது. இதனால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சியால் எங்களுக்கு எவ்வித சவாலும் இல்லை. எதிர்க்கட்சியினர் தங்களை மாற்றிக்கொள்ள ஆயத்தமாக இல்லை, பழைய அரசியல் மற்றும் பழைய சிந்தனைகளையே இன்னமும் பின்பற்றுகின்றார்கள். கடந்த வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பலருக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே அவர்கள் ஒன்றிணைந்திருக்கக்கூடும்.

எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்த போதிலும் நாட்டின் முன்னேற்றம் குறித்தோ அல்லது எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தோ எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை. மாறாக, வழக்குகளில் இருந்து எவ்வாறு தப்புவது மற்றும் மீண்டும் எவ்வாறு அதிகாரத்துக்கு வருவது என்பது குறித்தே பேசினார்கள்.

எதிர்க்கட்சிகளின் இந்த நகர்வுகளால் அரசு ஒருபோதும் பின்வாங்காது, நாங்கள் முன்னோக்கிச் செல்லும் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம். எதிர்க்கட்சியினர் பின்நோக்கிச் சென்ற போதிலும், அரசு தான் வைத்த அடியை ஒருபோதும் பின்னுக்கு வைக்காது நாட்டை கட்டியெழுப்பும் பணியைத் தொடர்ந்து முன்னெடுக்கும்.

நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் எவருக்கும் பேரணி செல்லவோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ முழு உரிமை உண்டு. கடந்த காலங்களைப் போல் அடக்குமுறைகள் ஏதும் பிரயோகிக்கப்பட மாட்டாது. இறுதியாக எதனை செய்வது என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு முழுமையாகத் தயாராகவே உள்ளது. எனினும், சில சட்டப் பிரச்சினைகள் நிலவுகின்றன, அவை தீர்க்கப்பட்டவுடன் தேர்தல்கள் நடத்தப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குக் கிடைக்கும் தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவது இயல்பான ஒன்று. அது தவறான தகவல் எனின், அதனை மறுப்பதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பல பொய்யான தகவல்களைத் தெரிவித்திருந்த போதிலும், தமக்குக் கிடைக்கும் தகவல்களை வெளியிடும் உரிமை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு உண்டு.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.