இரத்மலானையில் வீட்டின் மீது இன்று கைக்குண்டுத் தாக்குதல்! – தப்பியோடிய சந்தேகநபர்களைத் தேடி தீவிர விசாரணை.

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அந்த வீட்டை இலக்காகக் கொண்டு இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டன என்றும், அவற்றில் ஒன்று வீட்டின் முற்றத்தில் விழுந்து வெடித்ததுடன், மற்றைய கைக்குண்டு வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலின் போது அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. எனினும், குண்டு வெடித்ததில் வீட்டின் வெளிப்புறப் பகுதியிலும் சொத்துக்களுக்கும் பகுதி அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும், வெடிக்காத நிலையில் காணப்பட்ட மற்றைய கைக்குண்டைப் பாதுகாப்பாக மீட்டுச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவராத நிலையில், தனிப்பட்ட பகை, பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல் அல்லது கப்பம் கோரும் நடவடிக்கையா என்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திலுள்ள சிசிரிவி காணொளிகளை ஆய்வு செய்து வரும் பொலிஸார், தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்களை நியமித்துத் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.