உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – அமைச்சர் பிமலிடம் மனோ வலியுறுத்து.

வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்த இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புத் திட்டங்களின் வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி வழங்கத் தயாராகவுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி வடக்கை ஒரு புதிய வர்த்தக, முதலீட்டு, பொருளாதார மையமாக மாற்றும் வாய்ப்புகளுக்கு வடக்கு மாகாணத்தின் அரச பொறுப்பாளராகப் பணியாற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முட்டுக்கட்டை போடக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பலாலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இரு தேசிய உட்கட்டமைப்புத் திட்டங்களையும், பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த பலனைத் தராத மத்தல வானூர்தி நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய தோல்வியடைந்த திட்டங்களுடன் மறைமுகமாக ஒப்பிடுவது அறிவீனமானது என்றும், பலாலியும் காங்கேசனும் மத்தல, அம்பாந்தோட்டையை விடப் பழமையானவை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தன்னை இனவாதத்துக்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டாலும், வடக்கு எப்போதும் கொழும்பையே சார்ந்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மை அவரிடம் ஆழமாக இருக்கின்றது என்றும், இது அப்பட்டமான அரசியல் இரட்டை வேடம் என்றும் மனோ கணேசன் விமர்சித்துள்ளார்.

இந்தியா நிதி உதவி வழங்கத் தயாராக உள்ள நிலையில், பலாலி வானூர்தி நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தியைத் தாமதிக்காமல் முன்னெடுக்குமாறும் அவர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வட இலங்கையைக் கொழும்பைச் சார்ந்திருக்கும் ஒரு பிராந்தியமாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல், உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார அபிவிருத்தியுடன் நேரடியாக இணைந்த புதிய பொருளாதார மையமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்கள் வடக்குக்கு நேரடியாகப் பயணிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், வடக்கின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சி என்பதை மறக்கக் கூடாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.