பெண்கள் பொதுவெளிக்கு வரத் தடை? – கேரள மதகுருவின் சர்ச்சை கருத்து

கொச்சி,

பெண்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் பொதுவெளியில் நுழையக்கூடாது என்றும் கருத்து தெரிவித்து கேரளாவின் கிராண்ட் முப்தி ஷேக் அபுபக்கர் அகமது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மதகுரு, காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார். இவர், ஷேக் அபுபக்கர் அகமது என்றும் அழைக்கப்படுகிறார். சமஸ்தான கேரள ஜம் இய்யத்துல் உலமா மற்றும் அகில இந்திய சன்னி ஜம்இய்யத்துல் உலமா ஆகியவற்றின் பொதுச்செயலராக அபுபக்கர் உள்ளார்.

திருக்குர் ஆன்
சமீபத்தில் கொச்சியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் அவர் பேசியதாவது:

பெண்கள், தங்கள் கண்ணியத்தை காக்க, புர்கா எனப்படும் முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்கும் ஆடையை பயன்படுத்த வேண்டும் என இஸ்லாமிய நடைமுறை வலியுறுத்துகிறது.

இதைத்தான், பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். பொதுவெளிக்கு வரக்கூடாது என புனித நுாலான திருக்குர் ஆன் கூறுகிறது. இந்த கட்டுப்பாடானது, பெண்களை குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல; மாறாக, அவர்களை கவுரவிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் விதிக்கப்பட்டது.

பெரும் அழிவு
பெண்களை பொதுவெளிக்கு கொண்டு வருவது பெரும் அழிவுக்கு வழி வகுக்கும். ஒரு தங்க நெக்லசை சாலையோரத்தில் விட்டுவிட்டால், மக்கள் அதை தொடுவர்.

அதன் அழகும். மதிப்பும் இறுதியில் அழிந்துவிடும். அந்த நெக்லஸ், தன் அழகை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அது ஒரு பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு, கேரள அரசியல் கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.