டெங்கு நோயால் இவ்வருடம் இதுவரை 73 பேர் உயிரிழப்பு! – 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் இதுவரை 96 ஆயிரத்து 228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
செப்டெம்பர் மாதத்தின் முதல் நான்கு நாள்களில் மட்டும் 737 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாகாண ரீதியில், மேல் மாகாணமே அதிகளவான டெங்கு பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. நாட்டில் பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.84 சதவீதமானோர், அதாவது 50 ஆயிரத்து 851 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளனர்.
அதேவேளை, தென் மாகாணத்தில் 13 ஆயிரத்து 950 பேரும், மத்திய மாகாணத்தில் 8 ஆயிரத்து 818 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7 ஆயிரத்து 925 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
