காதலை முறித்த மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்!

லபுதுவ உயர்தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவி ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரால் மாணவியைக் காயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் மாணவியின் கையடக்கத் தொலைபேசி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காதல் தொடர்பை முறித்துக் கொண்டதன் காரணமாக மாணவி மீது இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவி சம்பவ தினம் இடம்பெற்ற பரீட்சைக்கு லபுதுவ தொழில்நுட்ப நிறுவனத்துக்கு வந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபரால் இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மாணவி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கைதான சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.