இலவச பேருந்து பயணத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.888 மிச்சம் – ஆய்வில் தகவல்

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதை திமுக அறிவித்தது. எனவே, பதவியேற்ற முதல் நாளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போதே பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

இதையடுத்து 2021ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு பேருந்துகளிலும், கிராமப்புற அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

இந்த திட்டம் ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில்,கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் 176.84 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு சராசரியாக 39.21 லட்சம் பயணிகள் இந்த திட்டத்தின் கீழ் பயணிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் பெரிதும் பயனடைவதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், இலவச பேருந்து பயணம் திட்டம் மக்களுக்கு எவ்வாறு உதவியுள்ளது என்பது குறித்து மாநில திட்டக்குழு ஆய்வு செய்து அதன் புள்ளிவிவரங்களைத் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின்படி, திட்டத்தின் பயனாகப் பெண்கள் மாதம் தோறும் சராசரியாக ரூ.888 மிச்சம் செய்வதாக தெரியவந்துள்ளது.

மேலும்,போக்குவரத்து செலவிற்காக பெண்கள் குடும்ப உறுப்பினர்களை நம்பியிருக்கும் தேவையும் குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.சிறிய நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் சராசரி வருவாய் ரூ.12,000க்கும் குறைவாக உள்ள நிலையில், ரூ.888 என்ற மிச்சத்தொகையை மற்ற குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என ஆய்வு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.