சர்ச்சை கருத்தால் சிக்கிய பாபா ராம்தேவ்…விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

யோகா குருவும் தொழிலதிபருமான பாபா ராம்தேவ் பெண்கள் குறித்த ஆட்சேபகரமான கருத்தைக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையம் சனிக்கிழமையன்று, அவரது நிலைப்பாட்டை மூன்று நாட்களில் தெளிவுபடுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெள்ளிக்கிழமை தானேயில் நடந்த ஒரு விழாவில், ராம்தேவ், “பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், பெண்கள் சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள், என் பார்வையில், அவர்கள் ஒன்றும் அணியாமல் இருந்தாலும் அழகாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.

விழாவில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் மக்களவை எம்பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண்களின் கவுரவத்தையும் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையில் அநாகரீகமான பாபா ராம்தேவ் கருத்துக்கு எதிராக மகளிர் ஆணையத்துக்கு புகார் வந்துள்ளது. எனவே, மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம், 1993 இன் பிரிவு 12 (2) மற்றும் 12 (3) இன் படி, பாபா ராம்தேவ் தனது அறிக்கையின் விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் ஆணைய அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சாகங்கர் ராம்தேவிற்கு தனது மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக ராம்தேவ் கூறிய ஆட்சேபகரமான கருத்துக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) சனிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி பெண் தொழிலாளர்கள் ராம்தேவின் புகைப்படத்திற்கு செருப்பால் மாலை அணிவித்தனர்.

மகாராஷ்டிர சட்டப் பேரவை துணைத் தலைவர் நீலம் கோர்ஹே இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “யோகா மூலம் நிதானம் மற்றும் ஆரோக்கியம் பற்றி அவர் சமூகத்திற்குச் சொல்லும் அதே வேளையில், அவர் பெண்களிடம் இத்தகைய இளிவான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார், அது மிகவும் தவறானது. எல்லா ஆண்களும் பெண்களை இப்படி பார்ப்பதில்லை. நம் நாட்டில் தங்களை தாங்களே குரு என்று சொல்லிக் கொள்ளும் பல ஆண்கள் இது போன்ற அநாகரீகமான கருத்துக்களை தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது,” என்றார்.

அம்ருதாவும், அங்கிருந்த மற்ற பெண்களும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்று கோர்ஹே கூறினார். மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த் கூறுகையில், ராம்தேவின் உண்மையான மனநிலை அவரது அறிக்கை மூலம் அம்பலமானது என்றார்.

மேலும் “மகாராஷ்டிர துணை முதல்வரின் மனைவி முன் பெண்கள் குறித்து ராம்தேவ் கூறியது அநாகரீகமானது மற்றும் கண்டனத்திற்குரியது. இந்த அறிக்கையால் அனைத்து பெண்களும் புண்பட்டுள்ளனர், பாபா ராம்தேவ்ஜி இந்த அறிக்கைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!” டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் வீடியோ ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.