பஸில் வகுக்கும் வியூகத்தில் நாம் வீறுகொண்டெழுவோம்! – ‘மொட்டு’ செயலர் சூளுரை.

“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிநடை போட வைப்பதற்கான வியூகங்களை பஸில் ராஜபக்ச தற்போது வகுத்து வருகின்றார். அந்தவகையில் விரைவில் வீறுகொண்டெழுவோம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னரே பஸில் ராஜபக்ச எம்.பி. பதவியை துறந்துவிட்டார். ஆனாலும், அரசியல் பயணம் தொடரும் என அறிவித்தார். அந்தவகையில் தற்போது வெற்றி வியூகம் வகுக்கப்பட்டு வருகின்றது. பலமான சக்தியாக எழுவோம்.

எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் தனித்துப் போட்டியிடக்கூடிய வல்லமை எம் வசம் உள்ளது. அதேபோல் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்கும் பின்நிற்கப்போவதில்லை. மக்களின் தேவைப்பாடு அறிந்து அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.