திருமலையில் கோர விபத்து; தங்கை பலி; அக்கா படுகாயம்.

திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி, கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும், பவுசரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் தாதி உத்தியோகத்தரும், ஆசிரியையும் கடமைக்காகச் சென்று கொண்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.

தாதியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது அக்காவான ஆசிரியை படுகாயமடைந்துள்ளார்.

குறித்த ஆசிரியை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.