அஃப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை: இது எப்படி நடத்தப்படும்?

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்தாப் பூனாவாலாவுக்கு வியாழக்கிழமை தில்லியின் ரோஹினியில் உள்ள மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ டெஸ்ட்) நடத்தப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நார்கோ எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடத்தப்படுகிறது என்றால், சோதனை நடத்துபவரின் நரம்பு வழியாக மருந்தினை செலுத்தி, மயக்க நிலையில் ஆழ்த்தி செய்யப்படும் ஒரு வகை சோதனையாகும். சோடியம் பென்டோத்தல், சோடியம் அமைடால் போன்ற மருந்துகளை ஒருவருக்கு செலுத்தும் போது, அந்த நபரின் சுயநினைவுத்திறன் சற்று மட்டுப்படும். அப்போது அந்த நபர் ஹிப்னோடிக் நிலை அல்லது மயக்கநிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த சோதனை நடத்தப்படுவதற்கு முன்பு, அஃப்தாப் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு என முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர் முழுமையாக நலமான இருக்கிறார் என்று மருத்துவர்கள் உறுதி செய்து கொண்டனர். நார்கோ டெஸ்ட் முறைகளை குற்றவாளியிடம் அதிகாரிகள் படித்துக் காட்டி, அவரிடம் ஒப்புதல் கையெழுத்தும் வாங்கிக் கொண்டனர்.

ஏற்கனவே அஃப்தாப்பிடம் பல முறை பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவர் ஷ்ரத்தாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

தற்போது உண்மை கண்டறியும் சோதனையும் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாலிகிராஃப் மற்றும் உண்மை கண்டறியும் நார்கோ சோதனையில் கிடைத்த தகவல்கள் ஒப்பிட்டுப் பார்த்து இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பு கூறுகிறது.

இந்த சோதனைகளின் போது குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் கூறப்படும் எந்தையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சாட்சியமாக தாக்கல் செய்யவே முடியாது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த சோதனைகளின் போது தெரிவிக்கும் தகவல்களைக் கொண்டு விசாரணை அதிகாரிகள் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் திரட்ட மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒருவேளை இவ்விரு சோதனைகளிலும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் போனால், அப்தாப்புக்கு பிரைன் மேப்பிங் எனப்படும் சோதனை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.