ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு யாழில்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேசிய மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோதராதலிங்கம் (ரெலோ), வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னால உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடக்கு, கிழக்கு மாகாண உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியை ஆரம்பித்து ஏழு வருடங்களின் பின்னர் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று நடைபெற்றது.

இதன்போது கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கட்சியின் கொள்கைப் பிரகடனம் கட்சியின் தலைவரால் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் வருகை தந்த அரசியல் பிரமுகர்களின் வாழ்த்து மற்றும் கருத்துரைகளும் இடம்பெற்றன.

கட்சியின் தலைவராக மீண்டும் சி.வேந்தன், உப தலைவராக ந.நகுலேஸ், செயலாளராக இ.கதிர், உபசெயலாளராக த.கவியரசன், பொருளாளராக த.விதுரன், தேசிய அமைப்பாளராக க.துளசி, மட்டு., அம்பாறை மாவட்ட இணைப்பாளராக ந.நகுலேஸ், வவுனியா மாவட்ட இணைப்பாளராக நெல்சன், திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக நவமேனன், யாழ். மாவட்ட இணைப்பாளராக கவியரசன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக கருணாகரன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக ஆதவன், மன்னார் மாவட்ட இணைப்பாளராக ஜீவா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.