மார்ச் மாதம் மீண்டும் போராட்டம் வெடிக்கும்! – அரசுக்குக் கம்மன்பில எச்சரிக்கை.

நாட்டில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் அரசுக்கு எதிராக மீண்டும் மக்களின் போராட்டம் தலைதூக்கும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையில் அவர் மேலும் கூறியதாவது:-

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை இவ்வார காலத்துக்குள் ஸ்தாபிப்போம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இனியும் பிற்போட முடியாது. அடுத்த மாதம் நிச்சயம் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேர்தலை நடத்த வரவு – செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசு எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் காணப்படுகின்றது.

சமூக பாதுகாப்பு அறவீட்டுத் தொகை வரி மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது. மின் கட்டண அதிகரிப்பைத் தவிர்த்து வேறு திட்டம் ஏதும் கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை முழுமையாகப் பாதிக்கப்படும். மக்கள் பொருளாதார ரீதியில் மேலும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறான பின்னணியில் நாட்டில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் அரசுக்கு எதிராக மீண்டும் மக்களின் போராட்டம் தலைதூக்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.