பணமதிப்பிழப்பு வழக்கில் சரமாரியாக கேள்விகளை அடுக்கிய நீதிபதி!

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. 5 பேர் கொண்ட இந்த நீதிமன்ற தீர்ப்பில் ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களுக்கு இன்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வாசித்தது.

இந்த தீர்ப்பில், நீதிபதி நாகரத்னா மட்டும் வேரொரு தீர்ப்பை வழங்கி இருந்தார். அவர் தீர்ப்பில், ஒரே அரசாணை மூலம் 1000, 500 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறு. பணமதிப்பிழப்பு போன்ற முக்கிய முடிவுகளை நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமல் எடுக்கக்கூடாது என தெரிவித்தார்.

மேலும், மத்தய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரிசர்வ் வங்கியின் முடிவை எடுப்பது ஏற்க்கத்தக்கதல்ல. பணமதிப்பிழப்பு முடிவை ரிசர்வ் வங்கியே பரிந்துரைக்க முடியும் என தெரிவித்த அவர், தரவுகளை பார்க்கும் போது ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்படவில்லை என தெரிவதாக கூறினார்.

மொத்த முடிவும் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பணமதிப்பிழப்பு ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். மேலும் பணமதிப்பு செய்யப்பட்ட பின் தற்போது என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.

இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதி, இந்த நடவடிக்கையால் 98% ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையால் பலன் இல்லை என தெரிவித்தார். மேலும் பணமதிப்பிழப்பை அதன் நோக்கத்தின் அடைப்படையில் சட்டவிரோதம் என கூறவில்லை என விளக்கமளித்த நீதிபதி, அதை செயல்படுத்திய விதம் சட்டவிரோதமானது என தெரிவித்தார். மேலும் பணமதிப்பால் ஏற்படும் பிரச்சனைகளை கவனிக்க மத்திய வங்கிகள் தவறிவிட்டன என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.