பணம் செலவிட்டு அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்கவே புதிய சட்டம்! – அமைச்சர் அலி சப்ரி விளக்கம்.

“தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியுமா? முடியாதா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பணம் செலவிட்டு அதிகாரத்துக்கு வருவதைத் தடுப்பதற்கு தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டம் நாட்டுக்குத் தேவை.”

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி மேலும் பேசுகையில்,

“பணம் செலவிட்டு, அதிகாரத்தை கைப்பற்றும் நிலையே இன்று இருக்கின்றது. இதனைத் தடுப்பதற்கு இருக்கும் சிறந்த வழியே இந்தச் சட்டமூலம். தங்களுக்குத் தேவையானதை நாட்டுக்குள் செய்துகொள்வதற்காக வெளிநாடுகள் பணம் செலவிட்டு சிலரைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்கின்றன. எனவே, இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டால் இது போன்ற செயற்பாடுகள் தடுக்கப்படும். இதுவொரு முழுமையான சட்டம் இல்லை என்றாலும் அடிப்படையான சட்டம்.

தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. இதுவொரு சிறந்த சட்டம் என்பதால் அனைவரும் இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும்.

அமெரிக்க போன்ற பலமிக்க நாடுகளில் நடைபெறும் தேர்தல்களிலேயே வெளிநாட்டு தலையீடுகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியென்றால் இலங்கை போன்ற சிறிய நாட்டில் எவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்கள் இருக்கும்?

இதேவேளை, சர்வதேச நாடுகளுக்குச் செல்லும்போது நாட்டில் ஏன் இன்னமும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இருக்கின்றது என்கிற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எவ்வாறாயினும் இதில் மாற்றங்களை ஏற்படுத்தி எமது அரசு இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சுமார் 200 பேரை விடுதலை செய்துள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.